×

சிறையில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு மேலும் நான்கு வாரம் விலக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக கூறப்படும் விவகாரத்தில் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்தார். இதையடுத்து சரணடைவதில் இருந்து விலக்கு கேட்டு பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாக்க செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சதீஷ் சந்திர சர்மா,‘‘இந்த விவகாரத்தில் பொன்முடி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கிறது என்றும், வழங்கப்பட்ட சிறை தண்டனை என்பது மூன்று வருடம் தான் என்பதால் பொன்முடி சிறையில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த உத்தரவு என்பது இதே வழக்கில் தொடர்புடைய அவரது மனைவி விசாலாட்சிக்கும் பொருந்தும்’’ என கடந்த 11ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் அபாய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது,‘‘இந்த விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நான்கு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. மேலும் அதுவரையில் பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இது அவரது மனைவி விசாலாட்சிக்கும் பொருந்தும் என உத்தரவிட்டார். அப்போது குறுக்கிட்ட பொன்முடி தரப்பு வழக்கறிஞர், ”தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள்,” முதலில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கட்டும், அதன் பின்னர் மற்ற விவகாரங்களை முடிவு செய்யலாம் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post சிறையில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு மேலும் நான்கு வாரம் விலக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ponmudi ,Supreme Court ,New Delhi ,G. Jayachandran ,Dinakaran ,
× RELATED ஜாமீன் பெற கால அவகாசம் கேட்டு அமைச்சர்...